முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Sunday, August 26, 2012

தமிழ்மொழி - கருத்துணர்தல்


தமிழ்மொழி படிவம் 4-5
கருத்துணர்தல்

கேள்விகள் 1 - 5
கொடுக்கப்பட்டுள்ள சிறுகதைப் பகுதியை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

காலை 7.00 மணிக்கே பள்ளிக்குச் சென்று விட்டேன். மாணவர்கள் பரபரப்பாக ஏற்பாட்டுப் பணிகளில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். செல்வராசு, எனக்கு முன்பே வந்து பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார். தன் பேச்சுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். எல்லா ஏற்பாடுகளும் மிக நேர்த்தியாகச் செய்து கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்ததும் என் மனம் லேசாய் இளகிப் போனது. எண்ணிப் பார்க்க முடியாத மாணவர்கள் கூட வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதைப் பார்த்த போது, துலக்குவதற்கு ஒருவர் மட்டும் இருந்தால், இவர்களை எங்கோ தூக்கி வைத்து விடலாம் என்பது மட்டும் புரிந்தது.

நேரம் 9.30ஐ நெருங்க-நெருங்க பெற்றோர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். ஆனால், மனதிற்குள் ஏதோ ஒன்று நெருடவே செய்தது. கூட்டம் இந்நேரம் பாதியாவது நிறைந்திருக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. நேரம் செல்ல - செல்ல ஒரு போராட்டமே உருவாகத் தொடங்கி இருந்தது. பத்து மணிக்கு நிகழ்வைத் தொடங்கலாம் என்றிருந்த எங்களுக்கு, அதுவரை 30 பேர் கூட வந்திராதது அடிவயிற்றையே கலக்க ஆரம்பித்தது. நான் செல்வராசுவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறேன். எந்தக் கலவரமும் இல்லாமல் அப்போதும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டுதான் இருந்தார்.

மணி 10.30ஐ நெருங்கியது. எழுநூறு பேரை எதிர்பார்த்த இடத்தில் வெறும் அறுபத்திரண்டு பேர் மட்டும் வந்திருந்தனர். இனியும் வருவார்கள் என்ற நம்பிக்கை கரைந்து போயிருந்த நிலையில்,

"சார்! இருக்கிறவங்கள வெச்சி ஆரம்பிப்போம். இனி வருகிறவங்க வரட்டும். நாம் காத்திருக்க வேண்டாம்." என்று செல்வராசு தோளைப்பற்றிக் கொண்டு சொன்னபோது, உள்ளம் முழுமையாய் ஒடிந்து விழுந்தது. "சரி" என்றேன். வந்த எண்ணிக்கையை வைத்துக் கொண்டு நிகழ்வு தொடங்கியது.

வந்திருந்தோரை நோட்டம் இடுகிறேன். எந்தச் சிக்கலையும் தராத மாணவர்களின் பெற்றோர்கள் தான் நிறைந்திருந்தனர். யாரை எதிர்ப்பார்த்தோமோ அவர்கள் வராதது, உள்ளத்தைக் கலக்கவே செய்தது. எதுவோ இனம் புரியாத ஒன்று உணர்வைக் குடையத் தொடங்கியது.

"...இங்க பாருங்க சார், இந்தச் சமுதாயம் முழுவதுமா புரையோடிப் போன சமுதாயம். இதற்கு மருந்து போட்டு மருத்துவம் பார்க்க நினைப்பது நாய குளிப்பாட்டி நடுவீட்டில வைக்கிற மாதிரி. பேசாம உருப்படியான வேலையைப் பாருங்க....," என்று நக்கலாகச் சொன்ன சங்கரன் ஆசிரியரின் கூற்று கூட உண்மைதானோ? எல்லா முயற்சியும் அவர் சொன்னதைப் போல வீண் தானோ? உள்ளம் உண்மையிலேயே தடுமாறத் தொடங்கியது. காலியான நாற்காலிகள் எல்லாம் என்னைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பதைப் போன்றிருந்தது.

நிகழ்ச்சிக்குப் பெற்றோரின் வருகை தவிர எல்லாமும் சிறப்பாகவே நடந்து முடிந்தது. ஆனால், உள்ளத்தின் தெம்பெல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டதை உண்மையாக உணர முடிந்தது.

                  பேரவைக் கதைகள் - நீரோடை (மு. தமிழரசு)


1.     18வது வரியில் "நம்பிக்கை கரைந்து போயிருந்த நிலையிலும்" எனும் தொடர் எதைக் குறிக்கின்றது?                                  [2 புள்ளிகள்]
   ______________________________________________________________________
   ______________________________________________________________________
   ______________________________________________________________________

2.     எத்தகைய பெற்றோர்களுக்காக இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது?
                                                    [2 புள்ளிகள்]
   ______________________________________________________________________
   ______________________________________________________________________
   ______________________________________________________________________

3.     "இந்தச் சமுதாயம் முழுவதுமா புரையோடிப் போன சமுதாயம்" எனும் தொடர் எதனைக் குறிக்கிறது?                                   [4 புள்ளிகள் ]
_____________________________________________________________________
_____________________________________________________________________
_____________________________________________________________________

4.     ஆசிரியர் செல்வராசு  எத்தகைய எண்ணம் கொண்டவர்?           
                                                   [ 2 புள்ளிகள் ]
   _____________________________________________________________________
   _____________________________________________________________________

5.     மாணவர்கள் நலன் கருதி நடத்தப்படும் நிகழ்வுகளுக்குப் பெற்றோர்கள் ஆர்வம்      காட்டாமல் இருப்பதற்கான காரணங்கள் யாவை?         [ 4 புள்ளிகள் ]
   _____________________________________________________________________
   _____________________________________________________________________
   _____________________________________________________________________
   _____________________________________________________________________
     

                      தயாரிப்பு: தமிழாசிரியர் திரு. .தமிழ்வாணன்
                               ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி

No comments:

Post a Comment